காந்திகிராம கனாக்களை...கடந்து சென்ற கணங்கள்..!
- Rabiyathul Basariya.M
- Mar 18, 2024
- 1 min read
காலங்கள் உருண்டோடி விட்டன
நம் தடயங்களை
நினைவு பேழையில் சுமந்து கொண்டு...
காணொளியில் சுயஅறிமுகம் பகிர்ந்த
காலங்கள் யாவும்
கானலாய் எம் கண்முன்னே...
கடுந்தவத்திலும் காண கிடைக்காத
கால சக்கரத்தில் கலந்தும் சிக்காத,
நாம் கொண்டாடிய நிமிடங்களும்
நம்மை கொண்டாடி தீர்த்த தருணங்களும்,
தாரக மந்திரமாய்
நட்பெனும் உணர்ச்சிக்குள்
நம்மை ஒன்றினைத்தன...
தொடர்வண்டியாய் தொடர்ந்து நீண்ட
தொடங்கி வைக்கப்படாத
வேலைகளின் சுமைகள் எல்லாம்...
தொடர்ந்து சென்ற பெட்டியின்
தடதடப்பிற்கு உள்ளே
தன்னை புதைத்து அடங்கி போயின...
தாண்டி செல்லும் பாதையில்
தன்னை அறியாமல் கவனம் பதிய
தன்னை தொலைத்து சென்றன கவலைகள்...
குழம்பிய குட்டையாய்
மனநிலை மாறும் வேளையில்,
குளம்பியோடு குளிர்ந்த காற்றும் கைகோர்க்க
நாம் குழுமும் மூலையில் அவையனைத்தும்
மறக்கடிக்க பட்டு மாற்றி அமைக்க பட்டன...
வியாபாரத்தை விட
விருப்பமான பேச்சுகளே
அதிகம் விற்று தீர்ந்தன...
தி்க்கு திசை அறியா
வாழ்க்கை பயணத்தின் தொடர்ச்சி
தீராத நினைவுகளை தேக்குமிடமாகியது...
சுழலும் நாட்களின் வேகத்தில்,
நீண்டு இருக்கலாம் என்றென்னும்
மனங்கள் ஒருபுறம் இருந்தாலும்,
முடிந்து விட்டது என
முற்றுப்புள்ளி வைத்து
அடுத்த வேலைகளில்
மூழ்கி போனாலும்,
இடைஇடையே
சற்றே இளைப்பாற
கனவுக்கரை சென்றால்,
நினைவலைகள்
சுகமாய் நம் நிழல் தீண்டும்
எப்பொழுதும்..!
- மு.ராபியத்துல் பஸரியா
Comments